முதலாவதாக நடத்தப்படப்போவது பாராளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்றிருந்த சர்ச்சைக்கு முடிவு கட்டி எதிர்வரும் ஜனவரி பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்க வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலை ஏன் அவர் 2 வருடங்கள் முன்கூட்டியே நடத்துவதற்கு முன்வந்துள்ளார் என்பதை முன்னைய கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருந்தேன். யுத்த வெற்றியையடுத்து தனது செல்வாக்கு உச்ச நிலையில் உள்ள படியால், காலம் தாழ்த்தினால் அது சரிந்து விடலாம் என எண்ணியே காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம் என்பதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டி நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ராஜபக்ஷ தீர்மானித்திருந்தார்.
இதனிடையில் ஜெனரல் சரத் பொன்சேகா களமிறங்கப் போவதாக செய்தி வெளியாகியதும் அரச தரப்பினர் சற்று கலக்கமடைந்த நிலையிலேயே எந்தத் தேர்தல் முதலாவதாக நடத்தப்பட வேண்டுமென்று சில நாட்களாகச் சிந்திக்கப்பட்டது. எவ்வாறாயினும் ஏலவே உத்தேசித்திருந்ததற்கு மாறாக ஜனாதிபதி தேர்தலைப் பின் தள்ளினால் அதுவே தனக்குப் பிரதிகூலமாகிவிடும் என்பதாலேயே ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என்ற இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னொரு காரணம் என்ன என்பதையும் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஜனாதிபதி அளிக்கும் வாய்ப்பு!
அதாவது, 2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனபடியால் "இப்போது நாடு ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் ஏனைய மக்களோடு சேர்ந்து ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வாய்ப்பளிப்பது எனது கடமை%27 என கடந்த செவ்வாய் அலரிமாளிகையில் வைத்து ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையில் ஜனாதிபதி கூறியுள்ளார். 2005 தேர்தலை வடக்கு, கிழக்கு மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென விடுதலைப் புலிகளால் கடுமையாக நிர்ப்பந்திக்கப்பட்டதாலேயே மகிந்த ராஜபக்ஷவுக்கு அத்தேர்தலில் வெற்றி கிட்டியது என்பதை யாரும் அறிவர். விடுதலைப் புலிகளுக்குத் தூது அனுப்பி தனக்கு உதவுமாறு கோரி ஆவன செய்ததன் பயனாகவே தேர்தலை வடக்கு, கிழக்கு மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று அன்று முடிவு எடுக்கப்பட்டது. அதுவே பகிஷ்கரிப்புக்குப் பிரதான காரணமாய் அமைந்திருந்தது எனலாம்.
பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகா
எதிரணியினரின் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகா நிறுத்தப்படவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு.) சார்பாகவே பொன்சேகா களமிறங்கவுள்ளாராயினும் இதற்கான இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக இக்கட்டுரை எழுதும் வரை அறிவிக்கப்படவில்லை. இதனிடையில் ஐ.தே.மு.வில் அங்கம் வகிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா.) இருகட்சிகளும் முன்னர் ஐ.தே.மு.வுடன் கூட்டாக ஜெனரல் பொன்சேகாவைச் சந்தித்ததற்கு அப்பால் தனித்தனியாகவும் அவரோடு சந்தித்ததாக அறியக்கிடக்கிறது.
பொன்சேகாவை ஜ.ம.மு.தலைவர் மனோ கணேசன் பா.உ, சந்தித்துக் கலந்துரையாடிய போது சிறுபான்மையினரின் உரிமைகள், உறுதிப்படுத்தப்படும் என பொன்சேகா உறுதியளித்ததாகவும் வேறு சில விடயங்கள் மீதும் இருவருக்குமிடையில் இணக்கம் காணப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஐ.ம.மு. ஆதரிக்கப்போவது பொன்சேகாவையா அல்லது வேறொரு வேட்பாளரையா என்பதற்கான இறுதி முடிவு நேற்றுக்கூடிய அரசியல் குழுவினால் எடுக்கப்படவிருந்தது. பொன்சேகாவே ஆதரிக்கப்படுவார் போல் தென்படுகிறது.
ஸ்ரீ.ல.மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் பா.உ., கருத்துத் தெரிவித்த போது பொன்சேகாவைத் தாம் வேட்பாளராக ஆமோதிப்பதற்கு முன்னதாக அவரோடு சில விடயங்கள் கலந்துரையாடப்பட வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் மலையக தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராகிய பழனி திகாம்பரம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இருவரையும் நேற்று மாலை ரவூப் ஹக்கீம் சந்திக்கவிருந்தார். அரசாங்கமாற்றமொன்று அவசியமென சிறுபான்மைக் கட்சிகள் ஆலோசித்து வருவதாகவும் ஹக்கீம் கூறியுள்ளதாக அறிகின்றோம். அண்மையில் சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் இடம்பெற்றதாகிய தமிழ் முஸ்லிம் கட்சிகள் சந்திப்பின் போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எதுவும் பேசக்கூடாது என எல்லோரும் எச்சரிக்கையாயிருந்தபோதும் இடைவேளைகளில் தேர்தல் தொடர்பாகக் கருத்துப் பரிமாறியதாக அறியக்கிடக்கிறது. தமிழ் தகவல் நிலையத்தினால் (கூச்ட்டிடூ ஐணஞூணிணூட்ச்tடிணிண இஞுணtணூஞு) ஒழுங்கு செய்யப்பட்ட சூரிச் சந்திப்பில் உண்மையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் விடயமே இலைமறை காயாக கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்குப் பின்னால் உள்ள சர்வதேச சக்திகளினது உள்நோக்கமும் அதுதான் எனலாம்.
மேலும், நேற்றுச் சந்தித்த ஐ.தே.க. நடவடிக்கைக் குழு பொது வேட்பாளர் தொடர்பான தனது இறுதி முடிவை அறிவிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஜெனரல் பொன்சேகாவை பொது வேட்பாளராய் நிறுத்துவதை ஐ.தே.க. தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க எதிர்த்து வந்தாராயினும் பின்னர் அவர் பொன்சேகாவைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடல் நடத்திய பின்பு தனது இணக்கத்தைத் தெரிவித்ததாகவும் தான் அரசாங்கத்தின் பக்கம் சாயமாட்டாரெனவும் தெரியவருகிறது.
ஜே.வி.பி.யின் போக்கு
மறுபுறுத்தில் ஜே.வி.பி.யானது ஏகபோகமான போக்கில் பொன்சேகா தான் தமது பொது வேட்பாளர் என அறிவித்துள்ளது. வேறு எந்தக் கட்சியுடனும் தாம் கலந்துரையாடல்கள் நடத்தப்போவதில்லையென ஜே.வி.பி முக்கியஸ்தர் அநுரகுமார திசாநாயக்க செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார். தம்மை இடதுசாரிகள் எனப் போலி முத்திரை குத்திக் கொண்டு இனவாதத்தில் மூழ்கிக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் எதிரியென இலகுவில் இனங்காணப்படக்கூடிய ஒருவரைத் தமது பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளதை விடத் துரோகத்தனமும் முட்டாள் தனமும் இருக்க முடியாது. மறுபுறத்தில் ஜே.வி.பி.இன்று ஒரு இடதுசாரிக் கட்சியல்ல என்ற வகையில் அவர்கள் மேற்கொண்டுள்ள முடிவானது ஆச்சரியத்திற்குரியதும் அல்ல.
இடதுசாரி வேட்பாளர் விக்ரமபாகு
ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளராக இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன களமிறங்கப் போவதாக நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
இந்த நாட்டின் ஆரம்பகால இடதுசாரித் தலைவர்கள் ஜாம்பவான்களாய் விளங்கியதோடு,இடதுசாரி இயக்கத்தை அரும்பாடுபட்டுக் கட்டியெழுப்பி நடத்தி வந்த வர்க்கப் போராட்டங்கள் மற்றும் 1953 ஹர்த்தால் போராட்டம் போன்ற நிகழ்வுகள் மூலம் அவ்வப்போதைய அரசாங்கங்களை ஆட்டிப்படைத்து வந்தனராயினும் இனவாத சக்திகள் கையோங்க விடாமற் செயற்பட்டு வந்தாராயினும் 1960களில் அவர்கள் முதலாளித்துவ சக்திகளோடு இணைந்து பயணிக்கத் தலைப்பட்டதோடு, இடதுசாரி இயக்கம் பாரிய பின்னடைவைச் சந்தித்தது. ஆனால், சற்றும் பிறழாது சற்றும் சலிக்காது இன்றும் தலைநிமிர்ந்து குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் சமத்துவம்,சுயநிர்ணயம் மற்றும் சுயாட்சி உரிமைக்காகவும் பொதுவாக அடக்கி ஒடுக்கப்படும் அனைத்து மக்கட் பிரிவினருக்காகவும் ஓங்கி ஒலித்துக் கொண்டு முன்னணியில் நிற்பவர் விக்ரமபாகு என்றால் அது மிகையல்ல.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் 4 வருடகாலச் செயற்பாடுகள்
இன்றைய பிரதான வேட்பாளர் ஜனாதிபதி ராஜபக்ஷவை எடுத்துக் கொண்டால் அவர் கடந்த 4 வருட ஆட்சிக் காலத்தில் அரசியல்,பொருளாதார சமூக மற்றும் கலாசார ரீதியாக நாட்டை ஒரு இருள்மயமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார். யுத்தத்தில் வெற்றியீட்டிய பின் தானே இந்த நாட்டு மன்னன் என்று சித்திரிக்கும் அளவுக்குக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதும் கைமேல் பரிசாக அடுத்த ஜனாதிபதி பதவியும் தனதே ஒழிய வேறு எவரும் அதனை எட்டலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற பாணியிலேயே காய்கள் நகர்த்தப்பட்டு வந்தன. ஆனால், அவர் முற்றிலும் எதிர்பாராத வகையில் ஜெனரல் பொன்சேகா தனது அரசியல் பிரவேசத்தைப் பகிரங்கப்படுத்தியதும் அரச தரப்பினர் அசந்து போய்விட்டனர். மற்றும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் 4 வருட ஆட்சிக் காலத்தில் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை ஏமாற்று விதையாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (அககீஇ) அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தலைமையில் 3 வருட காலத்திற்கு மேலாக அமர்வுகளை நடத்தி ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்து ஜனாதிபதி அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டதை விட வேறு ஒன்றும் நடைபெறவில்லை. மாறாக முதலில் விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட வேண்டுமெனக் கங்கணங்கட்டி நின்று அது நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், அடிப்படைப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதற்கு வேண்டிய பணியைப் புறந்தள்ளிவிட்டு நாடு இப்போது ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. சமாதானம் மலர்ந்து விட்டது என்றெல்லாம் வாய்ச்சவடால் அடிக்கப்படுகிறது.
தேர்தல் என்று வந்ததும் இடம்பெயர்ந்தோர் (ஐஈககு) மீளக்குடியமர்த்தல் முன்னர் நத்தை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலை திடீரென மாற்றம் பெற்று திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக மெனிக்பார்ம் முகாம்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட அனுமதித்தல் போன்ற நடவடிக்கைகள் திடீர் திடீரென அரசாங்கம் மேற்கொள்வதானது தமிழ் மக்களின் வாக்கு வங்கியைக் குறியாக வைத்தே நடைமுறைப்படுத்தப்படுவதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறாக தாம் பல்வேறு வழிகளில் ஏமாற்றப்படுவதற்கு அவர்கள் இடமளிக்கக்கூடாது.
ஜெனரல் பொன்சேகாவின் கடந்த காலச் செயற்பாடுகள்
மறுபுறத்தில் ஜெனரல் பொன்சேகாவைப் பொறுத்தவரை, அவர் அரசியலுக்குப் புதியவர் என்று நோக்கப்பட்டாலும் அவர் இராணுவத் தளபதியாயிருந்த போது தமிழ் பேசும் மக்கள் தொடர்பாக "கனேடியன் போஸ்ட்%27 சஞ்சிகைக்கு வழங்கியிருந்த செவ்வியில் குறிப்பிட்டிருந்த கருத்துகள் அவர் இனவாத அரசியலில் நாட்டம் கொண்டவர் என்பது தெளிவாகியிருந்தது. அதற்கு முன்பு அவர் யாழ்ப்பாணத் தளபதியாயிருந்தபோது உயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்குப் பாத்திரமாயிருந்தவர். பெருவாரியான விளைநிலங்கள் முடக்கப்பட்டதோடு, பல்லாயிரக்கணக்கான மக்கள் பல வருடங்களாக இடம்பெயர்ந்து அல்லலுற்ற வண்ணமுள்ளனர்.
ஆனால், இன்று அவர் குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக வழங்கும் வாக்குறுதிகளை நம்பி தமிழ் பேசும் மக்கள் ஏமாற்றப்படுவதற்குத் தமிழ் தலைமைகள் துணை போகக்கூடாது. மக்கள் தமிழ்த் தலைமைகளாலேயே ஏமாற்றப்படாமல் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டிய காலம் இது.
ஒட்டுமொத்தமாகப் பார்ப்போமாயின் தேர்தல் வேளையில் ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி என்றவாறாக பரிவாகப் பேசப்படும் வார்த்தைகள் அளிக்கப்படும் வாக்குறுதிகள் அப்பட்டமான ஏமாற்று வித்தைகள் என்பதை யாரும் மறந்துவிடுவதுதான் மிக ஆபத்தானதாகும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இடதுசாரி சக்திகளை மனப்பூர்வமாக ஆதரிப்பதுதான் அவர்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த கைங்கரியமாகும்.தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் குமுறல்களும் இத்தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் இன்றைய இக்கட்டான காலத்தில் நன்கு தெரிந்த பேரினவாத சக்திகளை அடியோடு நிராகரித்து இடதுசாரி சக்திகளின் கைகளைப் பலப்படுத்துவதுதான் அவர்களின் விடுதலைக்கான முதற்படியாகும்.
Published: Sep 02, 2010 04:00 GMT